புதைந்த ஞாபகம்......

ப்போதாவது வந்துபோகும் ஞாபகம் தான் ஆனால் கார்த்திகை மாதமானால் எப்படியாவது மறக்காமல் வந்துவிடும்.
மறந்துபோக வேண்டுமே என்று எங்கோ என்னுள் புதைத்து வைத்த அந்த புதைக்கப் பட்ட ஞாபகம் இன்றும் என்மனதில் வந்து என்னை கிளறி விட்டுப் போனது...

குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளை இந்திய அமைதிப்படை கைதுசெய்து அவர்களை சிங்கள அரசிடம் ஒப்படைக்க முற்பட்ட சமயம் தமது கொள்கையின் படி சயனைற் அருந்தி உயிர்துறந்தனர். அதற்குப் பின்னர்தான் இந்திய அமைதிப் படைக்கு எதிரான யுத்தம் வெடித்தது.

இறுதியாக கோப்பாய் எனும் இடத்தில்தான் நேருக்கு நேர் யுத்தம் நடந்ததென்று நினைக்கின்றேன் பின்னர் புலிகள் தமது தாக்குதல்களின் வியூகத்தை மாற்றி அமைத்துக் கொண்டனர். இருந்தாலும் குண்டுகளின் சத்தங்கள் தொடர்ந்தும் கேட்டபடிதான் இருந்தது.... !


தென்மராட்சியில் இதுவரை எதுவும் நடக்கவில்லை அதனால் சண்டை நடந்த இடத்தில் இருந்து கூடுதலானவர்கள் வெளியேறி தென்மராட்சியில் தஞ்சம் புகுந்திருந்தனர். எமது வீட்டிலும் நான்கு குடும்பத்தினர் தங்கி இருந்தனர் அதேபோல்தான் ஒவ்வொருவர் வீட்டிலும் பல குடும்பங்கள் தங்கி இருந்தனர்.

சண்டை தொடங்கியதில் இருந்து பாடசாலை நடக்கவில்லை வீட்டில் இடம் பெயர்ந்து வந்தவர்களின் பிள்ளைகளும் நானும் மற்றும் என் சகோதரர்களும் சில சமயம் பக்கத்து வீட்டாரும் சேர்ந்து ஏதாவது விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்போம். பாடசாலை போக முடியவில்லை என்ற கவலை மறந்து மற்றையவரும் இடம் பெயர்ந்து வந்தோமே என்கின்ற கவலையை மறந்தோ அல்லது மறப்பதற்காகவோ. ஏதாச்சும் விளையாடுவோம்.


எமது வீட்டில் இருந்து நகரச் சந்தை ஒரு கிலோமீற்ரர் தொலைவில் உள்ளது முன்னரை விட இப்போது தென்மராட்சியில் மக்கள் தொகை கூடியதால் சந்தை நிரம்பி வழியும். சந்தையை அண்மித்தபடி அரச மருத்துவமனை. அப்பா அங்கேதான் வேலை பார்க்கின்றார் ....
எமது வீட்டில் இருந்தவர்களும் சந்தைக்குச் சென்று திரும்பி விட்டார்கள். நானும் எமது வீட்டில் இருந்தவர்களின் பிள்ளைகளும் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம் ...

திடீரென வானத்தில் ஒருவிசித்திரமான ஹெலி பெரும் இரைச்சலுடன் வட்டமிட்டு சந்தையை நோக்கி பதிவதைக் கண்டோம் ஓரிரு நிமிடத்தில் .....ட்றாறாங்ங்.... என்று சத்தம் கேட்டது. பின்னர் திரும்பவும் அந்த ஹெலி மேலெழும்பி போய்விட்டது .... இதுவரையில் அப்படிச் சத்தத்தை கேட்டதேயில்லை. ஷெல், குண்டு, துப்பாக்கி, இவற்றின் சத்தங்கள் தெரியும் ஆனால் இந்தச் சத்தம் புதுவிதமாக இருந்தது....?!

முற்றத்தில் நின்ற எம்மை வீட்டினுள் வரும்படி அழைத்தார்கள்... சிறிது நேர நிசப்தம் பின்னர் வேலைக்கு போன அப்பா இன்னமும் வீடு திரும்பவில்லையே என்று அம்மா பதற்ரப்பட.... வீட்டில் இருந்த மாமா மார் தாங்கள் போய் பார்த்து வருவதாக கூறி சைக்கிலையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
எனது மனதில் ''கடவுளே அப்பாவுக்கு ஒன்றும் நடந்திருக்கக் கூடாது நல்லபடியாக வீடுவந்து சேரவேண்டும்'' என்று இறைவனை வேண்டியபடி இருந்தேன்...!


நேரம் ஆக ஆக மனதில் பயம் குடிகொண்டது. போன மாமாவினரையும் காணவில்லையே எனும் ஏக்கம் ஒவ்வொருவர் மனதிலும் இருந்தது. சில மணி நேரத்தின் பின்னர் அப்பாவும் மாமாவினரும் வந்தார்கள். அவர்கள் முகத்தில் கவலை படர்ந்திருந்தது. உடையெல்லாம் ரத்தத்தால் நனைந்திருந்தது. அம்மாவும் நாங்களும் பதறியடிக்க அப்பா இடை மறித்தார். ''சத்தம் போடாதைங்கோ எங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை'' என்று விட்டு நடந்ததை விபரித்தார்....

இந்தியன் ஆமியின் ஹெலி அப்பா மருத்துவ மனையில் இருந்த சமயம் வானத்தில் வட்டமிட்டு பின்னர் சந்தையை நோக்கி பதிந்து குண்டுகளை?? வீசியதாகவும் அதன் பின்னர் கெலி போய் சிறிது நேரத்தில் சந்தையில் இருந்து இறந்தவர்களின் உடல்களும் காயப் பட்டவர்களும் மருத்துவ மனைக்கு எடுத்து வரப்பட அவர்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட அப்பாவைத் தேடிப் போன மாமாவினரும் இணைந்து கொண்டனர். நேரம் ஆக வீட்டில் அனைவரும் பயத்துடன் இருப்பார்கள் தங்களைத்தேடுவார்கள் என்பதனால் தாம் வந்துவிட்டதாக சொன்னார்.

அன்றைய இரவு ஒருவரும் சரியாகத் தூங்க முடியவில்லை நடந்த தும்பியல் சம்பவங்களைப் பற்றிய பேச்சு. மனதில் நிறைந்திருந்தது சிறிது நேரத்தின் பின்னர் கண்ணயர்ந்து விட்டேன்.

எங்கள் வீட்டு நாய் தொடர்ந்து குரைக்க கண் விழித்து என்னவாக இருக்கும் என எட்டிப்பார்த்தேன். எனக்கு முன்னரே கண் விழித்த அப்பாவும் மற்றையவர்களும் சொன்னார்கள் நகருக்குள் ஆமி வந்து விட்டதாம் அதுதான் நகரை அண்மித்த பகுதியைச் சேர்ந்த சனங்கள் எல்லாம் கிராமத்தின் உட் பகுதிகளை நோக்கி இடம் மாறிக் கொண்டிருப்பதாக.

எங்கள் வீடும் பிரதான வீதியை அண்மித்து இருப்பதனால் எமக்கு பாதுகாப்பனதல்ல. ஓரிரு நாட்களிற்கு நாங்களும் ஒரு மைலேனும் கிராமத்தின் உள்ளே போய் இருந்துவிட்டு நிலமையைப் பார்த்து பின்னர் திரும்பவும் வீடு வருவோம் என முடிவெடுக்கப் பட்டது. ஆனால் எங்கு போவது...? வீட்டில் இருந்தவர்களுடன் சேர்த்து இருபது பேரும் எங்கே போய் தங்குவது ...? எனும் கேள்விகள் முன்னின்றன. பின்னர் எமது வீட்டில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போவதாக முடிவு செய்யப் பட்டு சில தினங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் , உடைகளும், பணம், நகை, போன்ற பெறுமதியானவைகளும் எடுத்துக்கொண்டு நாம் பிறந்து வளர்ந்த அந்த வீட்டை விட்டு கோவிலை நோக்கி அந்த அதிகாலையில் சூரிய உதயத்தின் முன்னரே வெளிக்கிடுகின்றோம்.

எமது அயலவர்களும் சேர்ந்து எம்முடன் வெளிக்கிட்டனர். ஆனால் பக்கத்து வீட்டு அப்பு மட்டும் வெளிக்கிடவில்லை. ''இந்த வயது போன காலத்தில என்னால அலைய ஏலாது என்ன நடக்கிற தென்றாலும் அது எனக்கு என்ர வீட்டிலையே நடக்கட்டும் நீங்கள் போட்டு வாங்கோ என்னைப் பற்றி கவலைப் படாதைங்கோ'' என விரக்தியாகப் பேசினார். எனது மனம் கனத்து வெடிப்பது போல் இருந்தது. எத்தனை பேர் இப்படி சொந்த நாட்டிலேயே சொந்த வீடுவாசலை விட்டு இடம்பெயர்ந்து அகதிகளாக அலைகின்றார்கள். ... நினைவுகளில் நாளையைப் பற்றிய சிந்தனையுடன் நாமெல்லாம் கோவிலை நோக்கி நகரத்தொடங்கினோம்.

கோவிலை வந்தடைந்ததும் வந்த களை தீர கோவில் கிணற்றில் தண்ணீர் அள்ளி குடித்துவிட்டு கோவிலின் அருகில் இருந்த அரசமரத்தருகில் எல்லோரும் கூடி இருந்தோம். எமக்கு முன்னரே வேறு பலரும் அங்கு வந்திருந்தனர். எல்லோருமாக எழுபது பேர்வரை அந்தக் கோவிலில் தஞ்சம் புகுந்திருந்தோம். ஒவ்வொருவர் முகமும் வாடிப்போய் இருந்தது. எல்லோருக்கும் மதிய உணவு செய்வதற்கான ஆயத்தம் நடந்து கொண்டிருந்தது ஒவ்வொருவர் கொண்டுவந்த அரிசி,மரக்கறி,பருப்பு, போன்றவற்றை ஒன்றாகப் போட்டு கறிச்சோறாக சமைப்பதற்கு கோவிலில் ஏற்கனவே இருந்த பெரிய பாத்திரம் எடுத்து மடப்பள்ளியில் அடுப்பு பற்ற வைக்கப் பட்டது.

அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. வீட்டில் இருக்கும் அரிசி மூட்டையில் ஒன்றை போய் எடுத்துவந்தால் ஒரு சில நாட்களிற்கான சாப்பாட்டுப் பிரச்சனை இருக்காதே என்று! அம்மாவிடம் சொன்னேன் ''எமது வீட்டடிக்கு இன்னும் ஆமி வரவில்லைத்தானே..? நான் கெதியாப் போய் ஒரு மூடை அரிசியை சைக்கிலில் கட்டிக்கொண்டு வாரேனென்று! அதற்கு அம்மா சொன்னா ''போக வேண்டாம் அங்கு ஒருத்தரும் இல்லை தேவை என்றால் பிறகு பார்ப்போம்'' என்று அதற்கு நான் ''இல்லை உடனும் வந்துடுவேன்'' என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்து மிதிக்க அங்கு நின்ற நண்பன் மோகன் தானும் வருவதாகச் சொல்லி சைக்கிலில் ஏறி விட்டான்..... தூரத்தில் ''அப்பாட்டை சொல்லிட்டுப் போ' என்று அம்மா சொல்வது கேட்டது. எனது சைக்கிள் வீடு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

இடை வழியில் மோகன் சொன்னான் ''டேய் மச்சான் எதுக்கும் நகர்ப் புறம் போய் ஆமி வந்திருக்கிறானா என்று எட்ட நின்று பாத்திட்டு வருவமோ..?'' என்றான். எனக்கும் சரி போய் பார்த்தால் போயிற்று என்று தோன்ற சைக்கிள் வீட்டையும் தாண்டி நகரை அண்மித்துக் கொண்டிருந்தது.

சிறிது தூரத்தில் இருந்தே பிரதான வீதியின் குறுக்காக மணல் மூடைகள் அடுக்கப் பட்டு பாதுகாப்பு அரண் அமைக்கப் பட்டிருந்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ''டேய் உண்மையிலே ஆமிக்காரன் நிக்கிறாண்டா வா திரும்பிப் போவம்" என்று சைக்கிலை நிப்பாட்டினேன். ''சரி உள் வீதியால போவம் அப்படியே தபால் கந்தோரடியால போய் டச்சு றோட்டால் வீட்டுக்கும் போவம்'' என்றான் எனக்கும் அது சரியாகப் பட அரச மருத்துவ மனையுடன் இருந்த வீதியால் உட்பக்கம் போய் பின்னர் ஒரு குச்சொழுங்கையினுள் சைக்கிலை சொலுத்தும் போது அருகில் இருந்த வீட்டு மதிலின் பின்னால் இருந்து ''ஹான்ஸ் அப்'' என்ற குரல் கேட்டது. திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தால் ஓர் ஆமி எம்மை நோக்கி துப்பாக்கியை நீட்டியவாறு நின்று கொண்டிருக்க வேறு இரண்டு ஆமிக்காரர் எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தனர்!

எனது இதயத்துடிப்பை மட்டுமல்ல மோகனின் இதயத்துடிப்பையும் என்னால் கேக்கக்கூடியவாறு இருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். ஓடுவோமா? அல்லது அப்படியே கையைத்தூக்கிடுவோமா என்று சிந்திப்பதற்கே நேரம்கிடைக்கவில்லை வந்த ஆமிக்காரர் மிகவும் நெருங்கிவிட்டதால் கையை உயர்த்தினோம். வந்தவர்கள் முதலில் எமது உடலைச்சோதனையிட்டார்கள். பின்னர் கையைத்தூக்கியவாறே நகரின் உள்நோக்கி எம்மை துப்பாக்கி முனையில் இட்டுச்சென்றார்கள். நான் அப்பாவுடன் அழுது அடம்பிடித்து வாங்கிய புதிய ஏசியாச் சைக்கிலையும் அப்படியே போட்டு விட்டு இனி என்ன நடக்கப்போகின்றதோ எனும் பயத்துடன் நகருக்குள் போகின்றோம்.

காலில் ஈயத்துகள்கள் மிதிபட்டன பார்க்கும் இடமெல்லாம் இரத்தக்கறை படிந்திருந்தது நவீனசந்தையின் முற்புறத்தில் உள்ள சிற்றுண்டிக் கடை எரிந்து கரிப்பிடித்ததுபோல் காட்சிதந்தது. சுவர்கள் சன்னங்களின் துளைகளினால் சல்லடை போடப்பட்டிருந்தது. பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலிம் பார்த்த அனர்த்தங்கள் இன்று நேற்று நடந்ததை நேரடியாகப் பார்க்கும்போது மனம் கனத்தது. ஏதோ ஒரு விரக்தியில் மனம் மரத்துப் போனது.

எம்மை இட்டுவந்தவர்கள் பிரதான பஸ்நிலையமருகில் இருந்த மரத்தருகேவிட இன்னும் பல ஆமிக்காரர் எம்மைவந்து சூழ்ந்து கொண்டார்கள் வந்தவர்களில் சிலர் தமிழராக இருந்தனர் திரும்பவும் எமது உடல்கள் சோதனை செய்யப்பட்டது. பின்னர் புலிகள் எங்கே என்று கேட்க எமக்கு புலியென்றால் என்னவென்பதே தெரியாத பாவனையில் தெரியாது என்றோம். ரெளண்டு கட்டி அடிப்பது என்பது கேள்விப்பட்டிருக்கிறேன். சினீமாக்களிலும் பார்த்திருக்கின்றேன் ஆனால் அது அப்போது எமக்கு நிகழ்ந்தது. அடிபடாத இடமே இல்லை எனலாம் அப்போது வலிக்கவில்லை.எனது மூழை நோவை உணரும் தன்மையை மறந்திருந்ததோ என்னமோ..?? இறுதியாக துப்பாக்கியை லோட் செய்து முனையை எனது வாய்க்குள் வைத்த ஒருவர் ''சொல்லு புலிகள் எங்கு இருக்கின்றார்கள் அவர்கள் அனுப்பிய ஆக்கள்தானே நீங்கள்..? சொல்லாவிட்டால் சுட்டுவிடுவேன்'' என்றார். நான் கண்களை இறுகமூடிக்கொண்டேன். அம்மா, அப்பா, சகோதரர், மற்றும் உறவினர் நண்பர்களது முகம் சிலைட்ஷோ வாக மனக்கண்முன் ஓடிக் கொண்டிருந்தது. ''அம்மா இனி எப்போது உன்னைக் காணப் போகின்றேன் என்னேரமும் எனதுயிர் பிரியப் போகின்றது'' என்று நினைக்க அப்போது அங்கு வந்த உயரதிகாரியாக இருக்க வேண்டும் ஹிந்தியில் மற்றைய ஆமிக்காரருடன் ஏதோ கதைத்தார்... பின்னர் எமது கைகள் இரண்டும் பின்னுக்கு இரண்டு கைப் பெருவிரல்களையும் ஒன்றாக இணைத்து கயிற்றினால் நன்றாக வரிந்து கட்டப்பட்டது. ஏற்கனவே உடைக்கப்பட்ட அருகில் இருந்த கடைக்குள் எம்மை உள்ளே தள்ளிவிட்டு ''இன்னமும் அரை மணித்தியாலத்தினுள் புலிகள் எங்கே இருக்கின்றார்கள் என்பதனைச் சொல்லாது விட்டால் கடையுடன் சேர்த்து குண்டு வைத்து விடுவோம்'' என்றுவர்கள் கடைக்கு வெளியில் மூவர் எமக்கு காவலுக்கு நின்றனர்.

கடையினுள்ளே எம்மைப்போல் இன்னும் நான்குபேர் இருந்தது அப்போதுதான் தெரிந்தது. அவர்களும் எம்மைப்போல் புதினம் பார்க்க வந்து மாட்டுப்பட்டவர்கள் தான். அவர்களைக் கண்டது மனதுக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தது... அந்த ஆறுதல் நாம் மட்டுமல்ல எம்முடன் சேர்ந்து இன்னும் பலரும் சாவதற்கு இருக்கின்றார்கள் என்பதனால் அல்ல. இரவில் ஒன்றுக்குப் போவதற்கே தனியாய் போகப் பயத்தில் யாரையும் துணைக்கு கூப்பிடுவது போல் பக்கத்தில் இக்கட்டான சூழ்நிலையில் இன்னும் பலர் எம்முடன் இருந்தது கொஞ்சம் மன ஆறுதல் தந்தது.

சில மணித்தியாலங்களின் பின்னர் எங்கள் ஆறு பேரையும் வெளியில் கூட்டிவந்து கைகளின் கட்டுக்களை அவிழ்த்தார்கள். எங்களை விடுதலை செய்யப் போகின்றார்கள் என நினைத்தேன். ஆனால் நடந்தது.... நான் பார்த்தது ..... இதைவிட இறந்திருக்கலாமோ..? என்று தோன்றியது.!

பிரதான வீதியின் ஓரத்தில் பாடசாலைக்கு அருகாமையாக ஒரு வெள்ளை வான் நின்றுகொண்டிருந்தது அதனை நோக்கி எம்மை வருமாறு அழைத்தார்கள். ''என்னவாக இருக்கும் இதில் ஏற்றி எம்மை எங்காவது கொண்டு போகப் போகின்றார்களோ''..? அருகில் சென்றபோதுதான் தெரிந்தது வான் முழுவதும் துப்பாக்கி துளைத்த ஓட்டைகளாக இருந்தது சில்லும் காற்றுப்போய் இருந்தது.

எம்மைச் சுற்றி ஒன்பது ஆமிக்காரர்கள் மட்டிலிருந்தார்கள் அதில் ஒருவர் தமிழன் இன்னும் ஒருவர் தமிழ் தெரிந்தவர். தமிழ் ஆமிக்காரர் சொன்னார் ''தம்பிகளா ஓடிடாதீங்க ஓடினால் சுடும்படி உத்தரவு நம்ம ஆக்கள் எல்லா இடமும் நிக்கிறாங்க நினைச்சுக்கூட பார்க்காதீங்க. பஸ்சுக்குள் இருப்பவற்றை அப்புறப் படுத்தியதும் உங்களை வீட்டுக்கு போக விடுவாங்க'' என்றார்!

வானினுள் இதுவரைக்கும் என்ன இருக்கின்றது என்று தெரியாமல் இருந்தேன் உள்ளுக்குள் ஏறிப்பார்த்தால் அம்மாடியோவ்..... ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், பெரியவர்கள், என ஒரு நாற்பது பேர்மட்டில் இறந்தபடி இருந்தனர் நான் பார்த்த காட்சியை அப்படியே என்னால் எழுத முடியவில்லை.... ....அவளவு கோரம்

அந்த நேரம் எனது மனம் கல்லாகிவிட்டது கதறவும் இல்லை கண்ணீரும் வரவில்லை அங்கிருந்த அனைவருமே அப்படித்தான் நின்றார்கள். எமக்கு முன்னர் பிடிபட்டிருந்த அண்ணா கொஞ்சம் கூடுதலாக உணர்ச்சி வசப் பட்டவராய் ''ஏன் இப்படி...???? இந்த பிஞ்சுகளைப்பார்த்தால் உங்களுக்கு போராளி மாதிரியா கிடக்கு'' என தமிழ் ஆமிக்காரரிடம் கேட்டார். அவரது மனமும் கொஞ்சம் சோர்ந்திருந்தது இருந்தாலும் அதை வெளிக் காட்டாதவர்போல் ''இரவு இந்தவழியால் வந்த வாகனம் மறிக்கும் போது நிறுத்தவில்லை அதனால்தான் இப்படியாகிவிட்டது. உள்ளே இருப்பது யாரென்று எப்படித் தெரியும்...? ..... நம்ம ஆக்களையும் உயிருடன் பிடித்து ரயரை மாலையாப் போட்டு கொழுத்தினாங்கதானே...?'' என்று தமிழ் ஆமிக்காரர் சொல்லி முடிக்க அந்த அண்ணா வாதாடுவதற்குரிய இடமில்லை இவர்களுக்கு என்ன தெரியும் சுடு என்றால் சுடுவது இவர்கள் கடமை. இவற்றை எல்லாம் இயக்குபவன் எங்கோ இருக்கான் இனி எதைப்பற்றிக் கதைப்பதும் பிரயோசனமில்லை என்பதுபோல் மெளனமானார்.

எமக்கும் இனி இதுதான் நடந்துவிடப் போகின்றதோ எனும் எண்ணம் எம் முன் விரிந்து நின்று பயமுறுத்தியது.!

ஏற்கனவே உடல்களைப் புதைப்பதற்கான குழிகள் மீன் சந்தைக்கு அருகில் உள்ள தண்டவாளத்திற்கு அடுத்த பக்கமாக ஒரு வெளிப் பிரதேசத்தில் மற்றைய ஆமிக்காரரினால் வெட்டப் பட்டுவிட்டன . உடுப்புக்கடை ஒன்று உடைக்கப் பட்டு அதில் இருந்த துணிகளை எடுத்துத் தந்தார்கள் இறந்தவர்களின் உடல்களை அத்துணிகளினால் சுற்றி புதைக்க வேண்டும். நானும் மற்றையவர்களும் ஒவ்வொரு உடலங்களாக வானில் இருந்து எடுத்து துணியால் மூடிக்கொண்டிருந்தோம். ஆனால் எனது நண்பன் மோகன் வானினுள் உடலங்களில் அணியப் பட்டிருந்த நகைகளை களற்றிக் கொண்டிருந்தான். இவனது இந்தச்செயல் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது ''டேய் என்னசெய்கிறாய்.... ?? இதெல்லாம் ஏன் இப்ப களட்டுறாய்...?'' எனக் கோபமாகக் கேட்டேன். அதற்கு அவன் சொன்னான் ''வீணாய் ஏன் இதையும் சேர்த்துப் புதைக்க வேணும்.... நீயும் வேணுமென்றால் களட்டிப் போட்டு புதைடா'' என்றான். ... ''சீ போடா நாமளே உயிருடன் போறமோ தெரியாது. எப்படியும் இந்தக் குழி ஒன்றுக்கை இவர்களுடன் நாமளும் சேரப் போறம். அதற்குள் நீ வேறு இந்த வேலை செய்யுறாய்! என்னவாவது செய் '' என்றேன் வெறுப்புடன். இதுவரைக்கும் பிண நாற்றம் வீசவில்லை எனக்கு ஆனால் இப்போதுதான் மோகனில் இருந்து அந்த நாற்றம் வீசுவதாக உணர்ந்தேன்.

சில மணித்தியாலங்களில் வானில் இருந்த அனைத்து உடலங்களும் புதைக்கப் பட்டு விட்டன அதில் இருந்தவர்களில் ஒருவரையும் எனக்குத் தெரிந்தவராக இல்லை இருந்தாலும் பலரது முகங்கள் இப்போதும் மனக்கண் முன் வந்து மறைவதுண்டு. பல ஆண்கள் பூனூல் அணிந்திருந்தனர் அவர்களையும் மற்றவர்களுடனேயே சேர்த்து ஒன்றாகப் புதைத்தோம். இங்கு சமயம், சாதீயம், எல்லாம் இறந்தபின் அனாதரவான உடல்களிற்கு ஏது ...? புதைப்பதா..? எரிப்பதா என்பதனைக்கூட எங்களால் முடிவு செய்யமுடியாது.! இப்போது நாங்கள் கைதியாக இருக்கின்றோம் அதனால்தான் இந்திய ராணுவத்தின் கட்டாயத்தின் பேரில் அவர்களால் கொல்லப்பட்டவர்களை புதைக்கின்றோம் என்றில்லாமல் எமது கடமை எனும் உணர்வுடன் காரியத்தை செய்து முடித்தோம். மனது அவர்களது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தித்துக் கொண்டது. !

இனி நாம் விடுதலையாகப் போகின்றோம் எனும் நினைவுடன் இருக்கும் போது அந்தத் தமிழ் ஆமிக்காரர் வந்து சொன்னார் இன்று இரவு அடுத்த நகருக்குரிய குறுக்கு வழிப்பாதையால் தம்மைக் கூட்டிப் போனதன் பின்னர் விடுதலை செய்வதாக. என்ன செய்யமுடியும் வாதாட முடியுமா..? சரி என்பது போல் தலையசைத்தோம் ...

மாலை ஆறு மணி இருக்கும் சரமாரியாக ஷெல் அடித்தார்கள். மனம் பதை பதைத்தது .... எனது உறவுகள், ஊர்மக்கள், என்னவானார்களோ..? எனும் ஏக்கம் மனதைப் பிடுங்க அந்தத் தமிழ் ஆமியிடமே கேட்டோம். ''ஊருக்குள் அப்பாவிப் பொது மக்கள்தான் இருக்கின்றார்கள் ஷெல் அடிப்பதை நிறுத்தச் சொல்லுங்கோ'' மன்றாடினோம். '' அது வெறும் பிளாஸ்ரிக் ஷெல். பாதிப்பொன்றும் வராது. இன்னும் கொஞ்சநேரத்தில் அடுத்த நகருக்கு போவதற்கு ஏதாவது எதிர்ப்பு வருகின்றதா எனப் பார்ப்பதற்குத்தான் பிளாஸ்ரிக் ஷெல் அடிக்கிறார்கள்''என்றார் அவர்.

சிறிது நேரத்தின் பின்னர் எமது கைகள் மீண்டும் பிணைக்கப்பட்டு அதன் மறுமுனையை ஒவ்வொரு ஆமிக்காரரும் பிடித்திருந்தனர் . ( மாட்டுக்கு கயிறு கட்டி அதன் மறு முணையை மாட்டு வண்டிக்காரன் பிடிப்பது போல) எம்மை முன்னே போகவிட்டு பின்னே நிரையாக கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் ஆமிக்காரர் எம்மைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் அந்தத்தமிழ் ஆமிக்காரர் இப்போது எம்முடன் வரவில்லை, ரவி எனும் பெயருடைய ஒரு ஹிந்திக்காரர்தான் அந்தப் படை நகர்வுக்கு பொறுப்பாக இருந்தார். எமது கயிற்றினை பிடித்திருந்த ஆமிக்காரர் இருவர் தமிழராகவும். மற்றைய வர்கள் தமிழ் தெரிந்தவர்களாகவும் இருந்தனர்.

சண்டை தொடங்கினால் முதலில் பலியாவது நாங்கள்தான். அதனால் அப்படி ஏதாவதென்றால் என்னநடந்தாலும் சரி ஓடிவிடவேண்டும் எனும் முடிவை மனம் எடுத்திருந்தது. அதுமட்டும் இவர்களின் வழிகாட்டிகளாகப் போவேன்.(வழிகாட்டியா மனிதக் கேடையமா என்பதுபற்றி தெரிந்திருக்கவில்லை) உள்வீதிகள், குச்சொழுங்கைகள், சில இடங்களில் வேலிகளை வெட்டி காணிகளினூடாகவும், பலரது முற்றத்திலும் கால் பதித்து நாம் நகர்ந்து கொண்டிருந்தோம். ஒருவர் வீட்டிலும் யாரையும் காணவில்லை அடித்த ஷெல்லுக்கு எல்லோரும் எங்கோ ஓடி ஒதுங்கியிருக்க வேண்டும், ஆடு, மாடுகள் மட்டும் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார்கள். சிறிது நேரத்தின் பின்னர் ''சோ'' வென்று நல்ல மழை பெய்தது உடலில், உடையில் உள்ள ரத்தக் கறையை கழுவி விடவேண்டும் என்றே வந்தது போலிருந்தது.

இரவு பதினொரு மணியளவில் நகரினை அடைந்து விட்டோம். எம்மை ஒரு கட்டிடத்தினுள் இருத்தி ஐந்து பேரை காவலுக்கு விட்டு விட்டு மிகுதி ஆமிக்காரர் தமது நிலைகளைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடு பட்டனர். நடந்து வந்த களையும், காலையில் அடிவாங்கிய நோவும், பிணங்களைப் பார்த்ததால் மனதில் ஏற்பட்ட தாக்கமும் அசதியில் ஈர உடையுடனும் என்னை அறியாமலே தூங்கிவிட்டேன்.

விழித்துப் பார்க்கும்போது விடிந்திருந்தது. மற்றையவர்களும் அப்போதுதான் ஒவ்வொருவராக கண்விழித்தார்கள். எமக்கு இன்று விடுதலை கிடைத்துவிடும்! எங்கே முன்னர் எம்முடன் நின்ற அந்த தமிழ் ஆமிக்காரர் என்று சுற்றும் முற்றும் பார்த்தோம். அவரை எங்கேயும் காண வில்லை. இங்கிருக்கும் தமிழ் ஆமிக்காரரிடம் கேட்டோம் ''எப்போது வீட்டுக்கு போகலாம்'' என்று ''தமது தலைமை அதிகாரி எப்போது உத்தரவு தருகின்றாரோ அப்போது போகலாம்'' என்றார்.

அப்பா என்னைக் காணாமல் ஊரெல்லாம் தேடினார். கடைசியாக நானும் மோகனும் நகரை நோக்கிப் போய்க் கொண்டிருந்ததினை பார்த்த யாரோ சொன்ன தகவலை வைத்து நான் ஆமியில் பிடிபட்டு விட்டேன் என்பதனை ஊகித்துக் கொண்டுள்ளார். ஆனால் உயிருடன் இருக்கின்றேனோ அல்லது எனக்கு என்ன நடந்து விட்டதென்ற செய்தி ஏதும் தெரியாமல் தவித்து. அம்மாவிடம் பாலன் சித்தப்பா வீட்டினருடன் எங்கேயோ நிற்கின்றான் எனும் பொய்யைச் சொல்லி வைத்திருந்தார்.

கையை பின்னுக்கு கட்டியது பெரும் இடைஞ்சலாக இருந்தது. மூக்கில் கடிக்கும். சொறிந்துவிடும்படி ஆமியையா கேட்கமுடியுமா...? எங்கிருந்தோ இலையான் வந்து முகத்தில் மொய்க்கும் கையைக் கட்டி வைத்தால் இலையான் கூட எம்முடன் தன் வீரம் காட்டும்.

பொறுக்க முடியாமல் ஆமிக்காரரைக் கேட்டேன் ''உங்கள் மேலதிகாரியிடம் கேட்டுச் சொல்லுங்கோ எங்களை எப்ப விடுவினம்'' என அவரும் எங்களில் இரக்கம் வந்தவராக ”இருங்கள் வருகின்றேன்” என்று சொல்லிவிட்டு பக்கத்தில் நின்ற ஹிந்திக்காரனிடம் ஏதோ சொல்லிவிட்டு தனது மேலதிகாரி இருக்கும் இடம் நோக்கி போனார்.

சிறிது நேரத்தின் பின்னர் எமது கைகளின் கட்டுக்கள் அவிழ்த்து விடப்பட்டன எமது விடுதலைக்காக அனுமதி பெற்றுவந்த ஆமிக்காரர் எம்மை இருவர் இருவராக பாதுகாப்பு முன்னரங்கம் வரை அழைத்துச் சென்று “பிரதான வீதியைப் பாவிக்காமல் உள்பக்கமாக உங்கள், உங்கள் வீடுகளுக்கு போங்கோ. வேறு பிரிவு ஆமிக்காரரிடம் இனி பிடிபட்டால் எம்மால் ஒன்றும் செய்யமுடியாது... கவனமா போங்க” என்றார் மோகன் ஏற்கனவே போய் விட்டான் நானும் மற்றைய அண்ணாவும்தான். எமது வீடு பிரதான வீதியின் எதிர் எதிர்த்திசைகளில் என்பதால் நாமும் பிரிந்து தனித்தனியாக பயனித்தோம்...!

விடுதலையாகிவிட்ட மகிழ்ச்சி கொஞ்சம் இருந்தாலும் நேற்றிரவு அடித்த ஷெல்லினால் எனது ஊரில் என்ன நடந்திருக்குமோ என்ற ஏக்கம் மனதினை வாட்டியது. அரைமணித்தியாலத்தில் ஊருக்குள் வந்துவிட்டேன் இது வரைக்கும் ஒரு மனித முகத்தையும் காண முடியவில்லை. விக்கிரமாதித்தன் கதைகளில் படித்த ஏதோ ஓர் முனிவரால் சபிக்கப்பட்ட ஊர்போல காட்சிதந்தது நம்மூர். கால்கள் என் இருப்பிடம் எங்கே என்று தடுமாறியது. எங்கே போவது...? வீட்டுக்குப் போவதா..? அல்லது புகலிடமாய் போன கோவிலுக்கு போவதா...? முதலில் கோவிலுக்கு போவோம் என முடிவு பண்ணி கால்கள் கோவில் நோக்கி நடந்தன..... மனதில் நேற்றுப் புதைத்த இறந்த உடல்களின் முகங்கள் வந்து வந்து போயின. எங்கிருந்தோ பறந்த குருவி ஒன்று எவ்வளவு இடம் இருந்தும் என் தலையில் எச்சமிட்டுப் போனது. கண்களில் நீர்கசிய கால்கள் நடைபிணமாய் புகலிடம் தேடியது!!!

[இத்துடன் புதைந்தது ஞாபகம்.]



No comments: